
சமையலறையில் வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் தானாகவே கண்ணீர் வருவதை அனுபவிக்காதவர் இருக்க முடியாது. இது ஒரு வழக்கமான நிகழ்வாக இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் விஞ்ஞான காரணம் உண்மையில் மிகவும் சுவாரசியமானது.
வெங்காயத்தை வெட்டும்போது, அதில் இருக்கும் செல்கள் சேதமடைகின்றன. இதன் காரணமாக வெங்காயத்தில் உள்ள சல்பர் அடிப்படையிலான நொதிகள் வெளிவந்து, அதனுடன் ஒட்டியுள்ள நொதிகளுடன் கலக்கின்றன. இதன் விளைவாக சின்-ப்ரோபனேத்தியல்-எஸ்-ஆக்சைடு என்ற வேதிப்பொருள் (“Syn-propanethial S-oxide”) உருவாகிறது. இந்த வாயு காற்றில் எளிதில் பரவி நம்முடைய கண்களில் அடைந்து, எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது கண்களின் கண்ணீர் சுரப்பிகளை பாதிக்கிறது இதன் காரணமாக தான் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பிக்கிறது.

இந்த வாயு கண்களில் உள்ள மெல்லிய திரவ அடுக்குடன் தொடர்பு கொண்டு லேசான சல்பூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இதனால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, கண்கள் தங்களை பாதுகாக்கும் உள்புற செயல்முறை தொடங்குகிறது. அதாவது, கண்களில் இருந்து அதிக அளவில் கண்ணீர் வரும் . இது, கண்களில் சேர்ந்த எரிச்சலூட்டும் வாயுவை வெளியேற்றும் ‘தற்காப்பு’ முறையாகும். இதனால் கண்களுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது..
அதாவது, வெங்காயம் உங்களை உணர்ச்சி மோசமாக்கவோ, அழ வைக்கவோ விரும்பவில்லை – அது ஒரு இயற்கையான வேதியியல் எதிர்வினையின் விளைவே! எனவே அடுத்த முறையில் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வந்தால், அது உங்கள் உடலின் பாதுகாப்பு செயல்பாடென நினைத்து சிரிக்கவும்..!!!