இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கவுகாத்தியில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்தசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில், ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஒரு ஓவரை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், கேப்டன் ரிஷப் பண்ட் கோபமடைந்து அவரைத் திட்டினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச 60 வினாடிகளுக்கு மேல் எடுக்கக் கூடாது என்ற விதியின் கீழ், இந்திய அணிக்கு ஏற்கெனவே இரண்டு முறை நடுவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மூன்றாவது முறையாக இதே தவறு நடந்தால் எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும் என்பதால், ரிஷப் பண்ட் இந்தக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“>

 

ஸ்டம்ப் மைக்கில் பதிவான அந்த ஆடியோவில், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவை நோக்கி, “நீங்க உங்க வீட்ல விளையாடுறீங்களா? சீக்கிரமா பந்தை வீசுங்க. ஏற்கனவே இரண்டு முறை நடுவர்கள் எச்சரிக்கை கொடுத்து விட்டார்கள் குல்தீப். இன்னும் 30 வினாடிகள்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒரு முழு ஓவர் தேவையா? நீங்க டெஸ்ட் கிரிக்கெட்டை ஜோக் ஆக்கிட்டிங்க” என்று கடுமையாகச் சாடினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இன்னும் 480 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ரிஷப் பண்ட்டின் இந்த ஆவேசப் பேச்சு, விதிகளின் அவசியத்தையும், டெஸ்ட் போட்டியில் அணியின் கவனத்தையும் உணர்த்துவதாக உள்ளது.