கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் அம்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(20). இவர் சென்னபட்டணாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது மதியமே அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மகாலட்சுமியை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் மகாலட்சுமி அப்பகுதியில் உள்ள ஏரியில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்ற மகாலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது யாராவது கொலை செய்து உடலை ஏரியில் வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.