மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் அழுதபடியே கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் மதுரை மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் பழனிச்சாமி மீதான குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு நீதிமன்றம் 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.