
அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியரான ரஞ்சிதா கோப குமாரன்(42) என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் வெள்ளரிகுண்டு துணை வட்டாட்சியர் பவித்ரன் ரஞ்சிதா குறித்து தனது முகநூல் பக்கத்தில், ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது.
ஆனால் அவர் வெளிநாட்டுக்கு சென்றார். அதற்கான பலனையும் அவர் அடைந்து விட்டார் என கூறினார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் காசர்கோடு மாவட்ட ஆட்சியர் துணை வட்டாட்சியர் பவித்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயிரிழந்த ரஞ்சிதா லண்டனுக்கு செவிலியர் வேலைக்காக சென்றார். சமீபத்தில் தான் அவருக்கு சொந்த ஊரில் மாநில சுகாதார சேவையில் வேலை கிடைத்தது. இதனால் பணி ஒப்பந்த காலம் முடிவடையும் முன்பே கடந்த வாரம் ரஞ்சிதா சொந்த ஊருக்கு வந்தார்.
பத்தினம்திட்டா பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வரும் ரஞ்சிதா இறுதி பணிகளை பார்வையிட வந்ததாக தெரிகிறது. லண்டனுக்கு சென்று விரைவில் சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ ரஞ்சிதா திட்டமிட்டுள்ளார். அதற்குள் பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது.