இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற போது அந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை ரசிகர்கள் உரக்கச் சொல்லினர். குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் குரல் ஓங்கி ஒலித்தது. முன்னதாக ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்.

குறிப்பாக வான்கடே மைதானம் உட்பட இந்தியாவின் எந்த மைதானத்தில் பாண்டியா விளையாடினாலும் அவருக்கு எதிரான கோஷங்கள் எழுந்தது. ஆனால் தற்போது உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியாவின் பெயரை விண்ணை பிளக்கும் அளவுக்கு ரசிகர்கள் உரக்க கூறினர். மேலும் மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு இடையே பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்திய அணி கோப்பையை வென்றவுடன் அடுத்த நொடியே ரோகித் சர்மா ஓடி சென்று ஹர்திக் பாண்டியாவை தூக்கி வைத்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இன்றுவரை சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.