மலப்புறம் மாவட்டம் தனலூர் பகுதியைச் சேர்ந்த சைனபா (44) என்ற பெண், வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் தேநீர் அருந்தும் போது கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேக்கின் ஒரு பகுதி தொண்டையில் சிக்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.

அவரை உறவினர்கள் கொட்டக்கல் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேலும் சிறப்புச் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் சைனபாவின் நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. பல்வேறு முயற்சிகளும் வெற்றியளிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சைனபா உயிரிழந்தார்.

திடீரென நடந்த இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மரணம் தொடர்பான தகவல் உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் பெரும் அதிர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சைனபாவின் மகள் கைருன்னிசாவின் திருமணம் சனிக்கிழமை(நேற்று) நடைபெறவிருந்தது. ஆனால் தாயின் மறைவு காரணமாக, அனைத்துத் திருமண நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. வெறும் நிகாஹ் நிகழ்ச்சி மட்டும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. பிற நிகழ்வுகள் பின்னர் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.