
சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் வசிக்கும் விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகனான ஜெயவர்தனுக்கு கடந்த ஒரு வாரமாக வாய்ப்பகுதியில் கட்டி உருவாகி வலி ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 22 ஆம் தேதி மாலை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு, மருத்துவர் முகமது உவைசி சோதனை செய்து, சனிக்கிழமை (24-ம் தேதி) மாலை அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றி விடலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, சனிக்கிழமை மாலை சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அறுவை சிகிச்சைக்கு அனுப்பினார்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறுவனை அறையிலிருந்து இடுப்பில் துண்டை கட்டிய நிலையில் அழைத்து வந்ததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக துண்டை அவிழ்த்து பார்த்தபோது, வாய்ப்புண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறுதலாக ‘சுன்னத்’ சிகிச்சை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர் உவைசியிடம் கேட்டபோது, சரியான விளக்கம் அளிக்காமல் தவிர்த்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்யுமாறு கூறி அமைதியாக அனைவரையும் கலைக்கச் செய்தனர்.
பின்னர், சிறுவனை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, “வாய்ப்புண் சிகிச்சைக்காக சென்ற என் மகனுக்கு சுன்னத் சிகிச்சை செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் மருத்துவர் முகமது உவைசியை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும், சுகாதாரத்துறை இணை ஆணையர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் சம்பவத்தினை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணை முடிவில், சம்பவம் நடைபெற்ற தனியார் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அறை மற்றும் ஆய்வகத்தை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.