தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ஏற்கனவே நேற்று இரவு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் அன்றைய தினங்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.