ரயில் பயணங்களின் போது லோயர் பெர்த் (Lower Berth) மற்றும் மிடில் பெர்த் (Middle Berth) பயணிகளுக்கு இடையே சீட் தொடர்பாக சண்டை நடப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்சமயம் ஓடும் ரயிலில் பயணிகளுக்கும், சில பெண்களுக்கும் இடையே லோயர் பெர்த் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து நடுவழியில் வெடித்த மிகக் கடுமையான வாக்குவாத வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

லோயர் பெர்த் டிக்கெட் வைத்துள்ளவர்கள் பகல் நேரத்திலும் மற்றவர்களை உட்கார விடாமல் தங்களது படுக்கை உரிமையைக் கொண்டாடுவதும், மிடில் பெர்த் பயணிகள் தங்களுக்கு உட்கார இடம் வேண்டும் என்று சண்டையிடுவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வ விதிமுறைகள் என்ன என்பது குறித்த தேடலும் நெட்டிசன்களிடையே அதிகரித்துள்ளது.

​இந்திய இரயில்வேயின் (Indian Railways) அதிகாரப்பூர்வ விதிகளின்படி, ரயிலில் தூங்குவதற்கான நேரம் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மட்டுமே ஆகும். இந்த நேரத்தில் மட்டுமே மிடில் பெர்த் பயணிகள் தங்களது படுக்கையை விரித்து தூங்க முடியும். காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலான பகல் நேரத்தில், லோயர் பெர்த் என்பது மிடில் மற்றும் அப்பர் பெர்த் பயணிகள் உட்பட அனைவரும் அமர்ந்து பயணிப்பதற்கான பொதுவான சீட் (Seating Space) ஆக மாறிவிடுகிறது.

எனவே, பகல் நேரத்தில் லோயர் பெர்த் டிக்கெட் வைத்துள்ளவர்கள் “இது என் சீட், நான் தூங்கப் போகிறேன்” என்று மற்றவர்களை உட்கார விடாமல் தடுக்க சட்டப்படி உரிமையே இல்லை. இந்த முக்கியமான விழிப்புணர்வு விதியைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ரயிலில் பயணிக்கும் போது சக மனிதர்களை மதித்து அட்ஜஸ்ட் செய்து பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.