ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் பூசாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

செக்டார் 70A பகுதியில் உள்ள ‘பாரஸ் ஏரென்’ (Paras Irene) சொசைட்டியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பூசையினை முடித்துவிட்டு பூசாரி மட்டும் தனியாக லிஃப்டைப் பயன்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக லிஃப்ட் கட்டுப்பாட்டை இழந்து, மேல் தளத்திலிருந்து மின்னல் வேகத்தில் தரைத்தளத்திற்கு நோக்கி விழுந்துள்ளது.

இந்த பயங்கர வேகத்தில் லிஃப்ட்டுக்குள் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறி பூசாரியின் தலையிலும் உடலிலும் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

லிஃப்ட் தரைத்தளத்திற்கு வந்து தானாகத் திறந்ததால், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். லிஃப்ட் அறுந்து விழுந்த இந்த பகீர் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த லிஃப்ட் குறித்து பலமுறை புகார் அளித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குருகிராம் போன்ற அதிநவீன நகரங்களில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பாதுகாப்பு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.