உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் கடந்த ஜூலை 31, 2024 அன்று சாலை விபத்தில் தரியாப் (38) என்ற நபர் இறந்தார். ஆரம்பத்தில் விபத்து என்று கருதப்பட்ட இந்த மரணம், டாடா ஏஐஏ காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.

தரியாப் பெயரில் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். இந்த வழக்கில் ஹரிஹர் சிங், வினோத் மற்றும் பங்கஜ் ராகவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பங்கஜ், மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் பல பாலிசிகளை தரியாப் பெயரில் எடுத்து, பின்னர் அவரது மரணத்தை விபத்து என சித்தரித்து காப்பீட்டுத் தொகையை பெற  திட்டமிட்டார்.

போலீசாரின் விசாரணையில், சம்பதன்று தரியாப்பிற்கு மது ஊற்றி கொடுத்து, முதலில் சுத்தியலால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் காரால் மோதி விபத்து நடந்தது போல சித்தரித்துள்ளனர். பிரேத பரிசோதனையில் தலை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான காயங்கள் இருந்ததும் இது விபத்து அல்ல என்பதை உறுதி செய்தது.

காப்பீட்டு தொகையை பெற, போலி மரணச் சான்றிதழ்கள், போலியான நாமினி கணக்குகள் உள்ளிட்டவற்றையும் குற்றவாளிகள் தயாரித்திருந்தனர். விசாரணையின் போது, ஆதார், பாஸ்புக், டெபிட் கார்டுகள், பல காப்பீட்டு சான்றிதழ்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் மீது முறைகேடு, சதி மற்றும் கொலை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை  தேடி வருகின்றனர்.