
திருவள்ளூர் மாவட்டம் நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜூன் 11ஆம் தேதி, அமேசான் செயலி மூலம் ‘விவோ V50 5ஜி’ மொபைல் போன் ஒன்றை ₹35,000 செலுத்தி ஆர்டர் செய்தார். ஆனால், மொபைல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருக்கு தீவிரமான ஏமாற்றம் காத்திருந்தது.
ஜூன் 16ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நிறுவன முகவரிக்கு அமேசான் டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சலை கொண்டு வந்தார். முன்னே பார்த்தபோது, மொபைல் பதிலாக சென்ட் பாட்டில் இருந்தது. இதனை கண்டித்து, விக்னேஷ் அந்த பார்சலை ஏற்க மறுத்துள்ளார். ஆனால், டெலிவரி ஊழியர், “உங்கள் பெயரில்தான் இது வந்திருக்கிறது. புகார் தெரிவிக்க, எங்கள் மேற்பார்வையாளர் சரவணனை தொடர்பு கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.
விக்னேஷ், சரவணனை தொடர்பு கொண்ட போது, “பார்சல் மாறி வந்திருக்கலாம்; புதிய மொபைல் அனுப்புகிறோம்” என தெரிவித்தார். ஆனால் பின்னர் எந்த பதிலும் வராததால், விக்னேஷ் அமேசான் செயலியில் புகார் பதிவு செய்தார். அதற்குப் பதிலாக, அமேசான் நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரி ஒருவர், “நாங்கள் ஏதும் செய்ய முடியாது” என கூறியதோடு, ஆபாசமாக திட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக விக்னேஷ், டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் புகார் அளித்துள்ளார். “என் மீது நம்பிக்கை மோசடி செய்த அமேசான் நிறுவன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தற்போது அமேசானின் சேவை தரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.