சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற ‘சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களின் 25 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் கீதா ஜீவன் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, “பெண்கள் உறுதி மொழி திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் போன்ற பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் முக்கியமான திட்டங்கள் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

தொடர்ந்து, வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு சுய மரியாதை, நியாயமான ஊதியம், சட்டப்பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யும் வகையில் வலுவான சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக அவரிடம் கோரிக்கையும் வழங்கப்பட்டது. மேலும், “பெண்களை மதிக்கவும், சம உரிமை வழங்கவும் வீடுகளில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கே முதலாவது பாடமாக கற்பிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பொய்யான  தகவல்கள் பரவுகின்றன, எனவே குழந்தைகளை கவனித்து கண்காணிக்க பெற்றோர் முன்வர வேண்டும். பெண்கள் முன்னேறினால், தமிழ் சமுதாயம் முன்னேறும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி. சசிகாந்த் செந்தில், அறக்கட்டளை தலைவர் ஜோசபின் அமலா, அறங்காவலர் எஸ்.கலின் மிராண்டா, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலர் எஸ்.வெங்கடலட்சுமி, நல வாரியச் செயலர் டி.தர்மசீலன் மற்றும் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.