
உத்தரபிரதேசம், ஆக்ராவில் திருமணம் ஆன அன்று மணமகனுக்கும், அவரது தாய்க்கும் போதைப்பொருள் கலந்த பாலைக் கொடுத்து, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடி மணமகள் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆக்ராவின் சீதா நகர் பகுதியில் கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது. ரிங்கு என்ற இளைஞருக்கும் ஆதிமா என்ற பெண்ணுக்கும் ரூ.1.20 லட்சம் தொகையில் இடைத்தரகரின் மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதலிரவுக்கு முன்பு மணமகள் தனது கணவருக்கும், பின்னர் மாமியாருக்கும் போதைப் பால் கொடுத்து, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், திருமணமெல்லாம் ஒரு திட்டமிட்ட மோசடி என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மணமகனின் குடும்பம் போலீசில் புகார் அளித்தபோதும், ஆரம்பத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜக எம்எல்ஏ டாக்டர் தரம்பால் சிங்கின் தலையீட்டிற்குப் பிறகு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணமகனின் குடும்பத்தினர் நாக்லா பாடி பகுதியில் சோதனை செய்ததில், மணமகளின் போலி அத்தையும் மாமாவும் அங்கேயே இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், ரிங்குவே நேரில் சென்று அவர்களை அடையாளம் காண, போலீசார் வந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் உண்மையில் மணமகளுடன் எந்த உறவுமில்லாதவர்கள் என்பதும் தெரியவந்தது.
தற்போது காவல்துறை இந்த இடைத்தரகரை தேடி தீவிரமாக நடத்தி வருகின்றனர். மணமகளின் உண்மையான பெயர் சுனிதா என்றும், அவருடன் இணைந்து செயல்பட்ட நபர் ராஜேந்திரா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.