
புனேவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, தரையிறங்கும் நேரத்தில் லேசர் ஒளி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் இன்று அதிகாலை 1.10 மணிக்கு தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்து கொண்டிருந்த போது, கிண்டி பகுதியில் இருந்து சக்திவாய்ந்த லேசர் லைட் விமானத்தின் மீது வீசப்பட்டது.
இச்சம்பவம் காரணமாக விமானிகள் சில வினாடிகள் நிலை குலைந்தனர். விரைவாக சிந்தனைத் தெளிவுடன் செயல்பட்ட விமானிகள், விமானத்தை மீண்டும் உயரத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக விமான பாதுகாப்புத்துறை (BCAS), விமான நிலைய காவல் துறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினர்.
அந்த லேசர் ஒளி சில வினாடிகளில் மறைந்துவிட்டது. பின்னர் விமானிகள் விமானத்தை காலை 1.20 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கினர். 178 பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். சம்பவம் குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பரங்கிமலை மற்றும் கிண்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று லேசர் ஒளி வீசும் சம்பவங்கள் அதிகமாக இருந்தன. போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததால் அவை குறைந்திருந்தன. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் இது மூன்றாவது முறையாக நடந்துள்ளது. இதனால் விமான பாதுகாப்பு மீதான அச்சம் உருவாகியுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், “விமானங்களுக்கு எதிராக லேசர் ஒளியை வீசும் நபர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார். இத்துடன், அந்த எச்சரிக்கையை மீறி மீண்டும் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது, அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.