உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு மைனர் சகோதரிகள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வந்தனர். இதை பயன்படுத்தி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி கீதா என்ற தரகர்கள், அந்த சிறுமிகளுடன் நட்பு வளர்த்தனர்.

பின்னர் வேலை வாய்ப்பு, இலவச உணவு மற்றும் தங்குமிடம் தருவதாகக் கூறி, அவர்களை வீட்டை விட்டு கிளம்பச் செய்தனர். கோரக்பூர் ரயில்நிலையத்தில் தரகர் அனுப்பிய நபர் அவர்களை வரவேற்று, பீகார் மாநிலம் பூர்னியாவிற்கு அழைத்துச் சென்றார்.

பூர்னியாவின் சிவப்பு விளக்கு பகுதியில், பாலியல் தொழிலுக்காக அந்த சிறுமிகள் இருவரும் விற்கப்பட்டனர். 15 வயது தங்கையை ₹1.20 லட்சத்திற்கும், 16 வயது அக்காவை ₹1.10 லட்சத்திற்கும் விற்றதாக தெரிய வந்துள்ளது. அதன்பின், அவர்கள் பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறுமிகளின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்ஸ்டாகிராம் சாட் பதிவுகள் மூலம் கீதா என்ற பெண்மணியின் தொடர்பு இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. பின் போலீசார் பீகார் மோதிஹரியில் உள்ள துர்காலியா பகுதியில் இருந்து மகேஷ் மற்றும் கீதாவை கைது செய்தனர்.

பின்னர் போலீசாரின் உதவியுடன், இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தற்போது கோரக்பூர் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.