புனே மாவட்டம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அகுர்டி பிரேம்லோக் வளாகத்தில், காவல் ஆணையரகத்திற்கு அருகில் உள்ள சாலையோர அரச மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் பாய்ந்ததைக் கண்ட மக்கள் அதனை அதிசயமாகக் கருதி வணங்க தொடங்கினர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியது.

மரத்திலிருந்து தண்ணீர் வெளியேறுவது போன்ற காட்சியைக் கண்ட பொதுமக்கள், அதை புனிதமான ஒன்றாகக் கருதி, பூஜை செய்தனர். மரத்தில் மஞ்சள், குங்குமம் பூசி பூக்கள் வழிபட்டனர். ‘புனித நீர்’ என நம்பிய சிலர் அதை குடிக்கவும் தொடங்கினர். சிலர் இந்த மரத்தில் கடவுள் இருப்பதாகவும், இது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் வெளிப்பாடாகவும் கூறினர். இந்த நிகழ்வை காண்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த சில பொது மக்கள் தீயணைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்துறையைத் தொடர்பு கொண்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மேற்கொண்ட ஆய்வில், அரச மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த நீர் குழாயில் கசிவுண்டாகியிருந்தது தெரியவந்தது. அந்தக் குழாய் வழியாக கசியும் தண்ணீர் மரத்தின் வேர்கள் வழியாக வெளியேறி, மரத்திலிருந்து தண்ணீர் பாய்வது போல தோன்றியதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.

உண்மையான காரணம் தெரியவந்ததும், அதிசயம் என நம்பிய மக்கள் அங்கிருந்து மெதுவாக விலகத் தொடங்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பெரும் அளவில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சம்பவத்தை பலரும் மூடநம்பிக்கை என விமர்சிக்கும் நிலையில் சிலர் இது உண்மையான வியத்தகு செயலாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.