கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சரண்யா புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக எனது கணவருக்கு இருதய பிரச்சனை இருக்கிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரச்சனை தொடர்பாக பரிசோதனை செய்ய எனது கணவரை அழைத்து சென்றேன். ஆனால் அவர்கள் என்ன பிரச்சனை என உறுதிப்படுத்தாமலேயே மாத்திரைகளை கொடுத்து வந்தனர். மாத்திரை சாப்பிட்டால் சரியாகும் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டு பார்த்தோம்.

ஆனால் நோய் சரியாகாமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டோம். இதனை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது இருதய வால்வில் வீக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் வால்வை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கூறிய போது இருதயத்திற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என கூறினர். தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு எங்களிடம் பண வசதி கிடையாது. எனவே அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரண்யா மனு அளித்துள்ளார்.