
கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி குத்தியது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனை கோவைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றும் ஏசுதாஸ், 5 மணி நேரம் ஆகும் மலைவழிப் பாதையை வெறும் 3 மணி நேரத்தில் கடந்தார். வழியில் உள்ள ஊர்களின் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினரின் உதவியுடன் போக்குவரத்தை சமாளித்து, நவநீதனை கோவை தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றார்.
தற்போது சிறுவன் சிகிச்சைக்கு பிறகு நல்ல நிலைமையில் உள்ளார் எனவும், பார்வை மீண்டும் கிடைக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் ஏசுதாஸின் இந்த சிறப்பான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.