இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை, நான்கு நாட்களாக உணவுமின்றி கடும் குளிரிலும் காவல் காத்த வளர்ப்பு நாயின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை சேர்ந்த பிக்ஷித் ராணா மற்றும் பியூஷ் ஆகிய இரு இளைஞர்கள், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி பர்மணி கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடும் பனிப்பொழிவில் சிக்கிய இருவரும் வீடு திரும்பவில்லை. அவர்களைத் தேடி உள்ளூர் மக்களும், மீட்புக் குழுவினரும் அந்தப் பகுதிக்குச் சென்றனர்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அங்கு கண்ட காட்சி அவர்களைக் கண்கலங்க வைத்தது. பியூஷ் என்ற இளைஞரின் உடல் பனி அடுக்குகளுக்கு அடியில் புதைந்திருந்தது. ஆனால், அந்த உறைபனியிலும், பனிப்புயலிலும் பியூஷின் வளர்ப்பு நாயான பிட்புல், அவரது உடலுக்கு அருகிலேயே நான்கு நாட்களாகக் காவல் இருந்துள்ளது.

உணவு ஏதுமின்றி, சுற்றியிருந்த காட்டு விலங்குகளிடம் இருந்து தனது உரிமையாளரின் உடலைப் பாதுகாத்து வந்துள்ளது அந்த நாய். ஆரம்பத்தில், மீட்புக் குழுவினர் உடலை நெருங்க முயன்றபோது, அவர்களை அணுகவிடாமல் நாய் ஆக்ரோஷமாகத் தடுத்தது. பின்னர், அவர்கள் உதவிக்காகத்தான் வந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொண்ட அந்த வாயில்லா ஜீவன், அமைதியாகச் சிறிது தூரம் விலகிச் சென்று உடலை எடுக்க அனுமதித்துள்ளது.

மேலும் உரிமையாளர் உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அந்த நாய் காத்து நின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.