
இந்தியாவில் திருமண பந்தம் என்பது ஒரு புனிதமான உறவாக பார்க்கப்படுகிறது. திருமண உறவில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் தம்பதிகள் விரும்புவார்கள். இப்படி இருக்கையில் திருமண உறவில் இருக்கும்போது மனைவி வேறொருவரை விரும்புவதும் கணவன் வேறொரு பெண்ணை விரும்புவதும் தகாத உறவாக பார்க்கப்படும் நிலையில் இது சட்டப்படி குற்றம் என்று கருதப்படுகிறது. தகாத உறவுகளால் பல குடும்பங்கள் சீரழியும் செய்திகள் கூட வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா தற்போது வழங்கிய ஒரு தீர்ப்பு சர்ச்சையாக மாறியுள்ளது.
அதாவது உயர் நீதிமன்றத்தில் மனைவி வேறொருவரை விரும்புவதால் அவரை விவாகரத்து செய்வதாகவும் விவாகரத்துக்கு பிறகு பராமரிப்பு செலவுக்காக பணம் கொடுக்க முடியாது என்றும் ஒரு கணவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனைவி வேறொருவர் மீது அன்பும் காதலும் வைத்திருப்பதை தகாத உறவு என்று கூற முடியாது என நீதிபதி குர்பால் சிங் கூறினார்.அதன் பிறகு மனைவி வேறொருவரை விரும்பினாலும் விவாகரத்துக்கு பிறகு கண்டிப்பாக பராமரிப்பு செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அவர் தீர்ப்பு வழங்கினார். மேலும் அந்த கணவர் தொடர்ந்த வழக்கையும் அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.