சென்னை தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஸ்டெல்லா மேரி, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் 2020 முதல் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். தனது கணவர் சுரேஷ், ஆரணி பகுதியில் நெசவுத் தொழிலில் குறைந்த வருமானத்துடன் பணி செய்து வந்ததால், ஸ்டெல்லா தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வீட்டு தேவைகளுக்காக சட்டவிரோத வழியில் வருமானம் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

இதில் அவர் 6 முறை கைது செய்யப்பட்டும், சூழ்நிலையால் மீண்டும் மீண்டும் அதே வழியில் திரும்ப வேண்டியதாயிற்று. இந்த நிலையில் மணிமங்கலம் காவல் நிலைய போலீசார் ஸ்டெல்லாவை நேரில் சந்தித்து, “சட்டவிரோத செயல்களில் இருந்து விலகி வருகிறீர்களானால், உங்கள் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம்” என்று உறுதியளித்தனர்.

இதனை நம்பிய ஸ்டெல்லா, கடந்த 8 மாதங்களாக மது விற்பனையை முற்றிலும் நிறுத்தி நேர்மையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். இந்த மாற்றத்தை பாராட்டிய போலீசார், அவரது கணவருக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும் என்பதை அறிந்ததும், அவருக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி ஸ்டெல்லாவின் கணவர் சுரேஷை அழைத்து, ₹50,000 முன்பணமாக செலுத்தி அவருக்குப் புதிய ஆட்டோவொன்றை வாங்கிக் கொடுத்து, அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுவதற்கு அனுமதியும் ஏற்படுத்தி வைத்தனர்.

இனி ஆட்டோ ஓட்டும் வருமானத்தில் குடும்பச் செலவுகளையும் மாத தவணையையும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியும் இருக்கின்றனர். சட்டம் மீறியவர்களை மட்டுமல்லாது, திருந்த விரும்புபவர்களுக்கு வாழ்க்கையை மறுபடியும் கட்டமைக்க உதவும் இந்த காவல்துறையின் செயல், பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.