தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னைக்கு அருகே 430 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புயல் உருவாகாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நாளை மாலை மாமல்லபுரம் காரைக்கால் இடையே  கரையை கடக்கும் என்னும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை 10:00 மணி வரையில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.