சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்த கமலா மற்றும் அவரது மகள் சாந்தி, சாந்தியின் கணவர் மூர்த்தி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

சமீபத்தில் கமலா உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டில் உள்ள மற்றவர்கள் வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். மாலை 4 மணியளவில் சாந்தி வீட்டில் தனியாக இருந்தபோது, துணிகளை துவைப்பதற்காக 7 ஆண்டுகள் பழைய வாஷிங் மெஷினை இயக்கினார்.

அப்போது  இயங்கிக் கொண்டிருந்த வாஷிங் மெஷினில் திடீரென தீப்பற்றியதுடன், சிறிது நேரத்திலேயே தீ வேகமாக பரவியது. சாந்தி அதை அணைக்க தண்ணீர் ஊற்றியபோதும், தீ இன்னும் வேகமாக பரவி, மின்சார வயர்களில் ஊடுருவியது. இதையடுத்து வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

தீ வேகமாக பரவியதால் வீடு முழுவதும் தீக்கிரையாகி, அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமானது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைவில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அதிகளவு துணிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் மெஷின் அதிகமாக சூடேறி,  தீப்பற்றியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கசிவு மூலமாக ஏற்பட்டதா என்பதைப் பற்றியும் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டு பொருட்கள், குறிப்பாக சாந்தியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி, கமலா சோகத்தில் மூழ்கினார். இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.