
நாட்டில் கள்ளநோட்டுப் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கியின் புது அறிக்கையில் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரூ.500 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கடந்த நிதியாண்டில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் மட்டும் 1.18 லட்சம் கள்ள ரூ.500 நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதன் மொத்த மதிப்பு ரூ.5.88 கோடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட ரூ.4.28 கோடி மதிப்பிலான 85,711 கள்ளநோட்டுகளை ஒப்பிடும் போது அதிகரிப்பு என்றே கூறப்படுகிறது.
இதேபோல், ரூ.200 மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ம் நிதியாண்டில், ரூ.65.32 லட்சம் மதிப்பிலான 32,660 கள்ள ரூ.200 நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது 2023-24ம் ஆண்டின் 28,672 கள்ளநோட்டுகளுடன் ஒப்பிட்டால் 13.9 சதவீதம் அதிகமாகும். ஆனால், தற்போது புழக்கத்தில் இல்லாத ரூ.2000 நோட்டுகள் தொடர்பான கள்ளநோட்டுகள் கணிசமாக குறைந்துள்ளன. 2024-25ஆம் ஆண்டில் ரூ.2000 கள்ளநோட்டுகள் 3,508 மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது 26,035 ஆக இருந்தது.
இந்த அறிக்கையின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், மொத்தமாக கள்ளநோட்டுப் புழக்கம் சற்று குறைந்துள்ளதுதான். 2023-24ம் ஆண்டில் 2.22 லட்சம் கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டில் இது 2.17 லட்சமாக குறைந்துள்ளது. மேலும், தற்போதைய கள்ளநோட்டுகளில் 4.7 சதவீதம் ரிசர்வ் வங்கியில் மற்றும் 95.3 சதவீதம் பிற வங்கிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளநோட்டுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், அது முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதே முக்கிய சிக்கலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும், அதன் முக்கிய நோக்கம் கள்ளநோட்டுகளை ஒழிப்பதுதான் என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும், தற்போதும் அவை புழக்கத்தில் இருப்பது மக்களை விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் புரிந்து கொண்டு, எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.