
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதைத்தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.