திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செ.அகரம் கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அஜித் சென்னை ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அஜித் தனது தந்தை மற்றும் தாய் பெயரில் இருக்கும் நிலத்தை அளவீடு செய்வதற்காக கடந்த 18-ஆம் தேதி பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். அப்போது கிராம நிர்வாக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தற்காலிக சர்வேயர் ரஞ்சித் குமார் ஆகியோர் நிலத்தை அளக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து அஜித் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அஜித் ஹரிகிருஷ்ணன் மற்றும் ரஞ்சித்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.