
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம் கோகுல்தாம் சொசைட்டியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் கூரையில், குழந்தையைத் தலைகீழாக தொங்கவிட்ட அதிர்ச்சி சம்பவம் திங்கள்கிழமை மாலை 7:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் கோபத்தின் காரணமாக தனது குழந்தையை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இது பற்றி குழந்தையின் தந்தைக்கு தெரியவந்ததும், அவர் உடனடியாக மாடிக்கு ஓடிச் சென்று குழந்தையை மேலே இழுத்து உயிரைக் காப்பாற்றினார். சொசைட்டியில் வசிக்கும் ஒருவரின் புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் தனது பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட கோபத்தில் தான் குழந்தையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்தது. குழந்தைக்காக கணவன்-மனைவிக்குள் ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, மாளவியா நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவியின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளார். இந்த தாயின் நடவடிக்கையை பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும் எந்த காரணத்திற்காகவும் ஒரு குழந்தையின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் செயல் சரிவராது என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன.