
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது நந்தோய் சர்மா மற்றும் 21 வயது லம்னுந்தெம் சிங்சன் ஆகிய இரண்டு இளம் விமானப் பணிப்பெண்களும் அடங்கினர். இவர்கள் இருவரும் சுமார் ஒரு ஆண்டுக்குள் ஏர் இந்தியாவில் பணியமர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தோய் சர்மா, தௌபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் இம்பாலில் உள்ள டிஎம் வணிகக் கல்லூரியின் வளாக வேலைவாய்ப்பு வாயிலாக ஏப்ரல் 2023ல் ஏர் இந்தியாவில் சேர்ந்திருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்பு, அவர் தனது சகோதரியிடம் அழைப்பு வைத்து “நான் லண்டனுக்குச் செல்கிறேன், ஜூன் 15-க்குள் திரும்புவேன்” என கூறியிருந்தார். ஆனால், அழைப்பு நெட்வொர்க் பிரச்சனையால் துண்டிக்கப்பட்டது.
மற்றொரு விமான ஊழியர் லம்னுந்தெம் சிங்சன், தனது குடும்பத்தில் ஒரே மகளாக இருந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு அவர் ஏர் இந்தியாவில் கேபின் குழுவில் சேர்ந்தார். விபத்திற்கு முந்தைய தினம், “அகமதாபாத்துக்குச் செல்கிறேன்” என தாயிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. இந்த பயங்கர விபத்து, மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு குடும்பங்களை இடித்து நொறுக்கியது. மேலும் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விமான பணிப்பெண்களின் வருமானத்தை நம்பி குடும்பம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.