மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் உடைகள் குறித்த பாஜக மூத்த தலைவர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா வெளியிட்ட கருத்து தற்போது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “பெண்கள் அரைகுறை  ஆடைகளை அணிவதில் எனக்கு விருப்பமில்லை. இந்திய கலாச்சாரம் பெண்களை தெய்வ வடிவமாகக் காண்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் மென்மையான, அழகான உடைகளை அணிந்து நடக்க வேண்டும்,” என்றார்.

மேற்கத்திய நாடுகளில் அரைகுறையான ஆடைகளை அணிந்த பெண்கள் அழகாகக் கருதப்படுவதை அவர் கண்டித்தார். “நமது இந்திய கலாச்சாரம் பெண்களை நாகரீக உடைகளில், நகைகள் அணிந்து அழகாகவும் மதிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு பெண் தெய்வ வடிவம் என்பதாலே அவள் நடத்தை, ஆடைகள் அனைத்தும் மரியாதையாக இருக்க வேண்டும்,” என விஜய்வர்கியா குறிப்பிட்டார். மேலும், சில பெண்கள் அவருடன் செல்ஃபி எடுக்க வரும்போது, “மகளே, அடுத்த முறை நல்ல உடையுடன் வா” என்று கூறினார்.

இதற்கு முந்தைய காலங்களிலும் கைலாஷ் விஜய்வர்கியா பெண்கள் குறித்த தனது கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டு, ஹனுமான் ஜன்மோத்சவ நிகழ்ச்சியில் பேசிய போது, “இப்போது சில பெண்கள் தெய்வங்களைப் போன்று இல்லாமல், ஷூர்ப்பனகையைப் போல அழுக்கான ஆடைகளை அணிகிறார்கள்” என கூறினார். அந்தப் பேச்சும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் தற்போது வெளியான இந்த புதிய கருத்தும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பல்வேறு தரப்புகளிடம் கண்டனங்களை எழுப்பி வருகிறது.