
பாகிஸ்தானில் 17 வயதான சமூக ஊடகப் பிரபலமான சனா யூசுப் என்று சிறுமி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி மாலை 5 மணியளவில் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, 22 வயதான இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, சனாவுடன் சில நிமிடங்கள் பேசிய பிறகு, அவரது மார்பில் இரு முறை துப்பாக்கிய சுட்டுள்ளார். இதில் காயமடைந்த சனா ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே உயிரிழந்தார். அந்த இளைஞர் சனாவின் மொபைலை எடுத்து விட்டு தப்பியோடியுள்ளார்.
சனா யூசுப், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான முகமாக இருந்தார். ஃபேஷன், வாழ்க்கைமுறை, பெண்கள் அதிகாரம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, டிக்டாக்கில் 8 லட்சம் பின்தொடர்பவர்களையும், இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பின்தொடர்பவர்களையும் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் நடந்தவுடன் போலீசார் விசாரணையை தொடங்கினர். சுமார் 300 அழைப்பு பதிவுகள், சிசிடிவி காட்சிகள், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. 20 மணி நேரத்துக்குள் குற்றவாளி பைசலாபாத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், சனா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கடந்த ஒரு வருடமாக பழக்கத்தில் இருந்ததாகவும், மே 29ஆம் தேதி சனாவின் பிறந்த நாளையொட்டி சந்திக்க திட்டமிட்டிருந்தாலும், அது நிறைவேறவில்லை என்றும் தெரியவந்தது. கொலை நடப்பதற்கு முன்பாக அந்த இளைஞர் சனா உடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சனாவின் தாயாரும், மைத்துனியும் வீட்டில் இருந்ததாகவும், துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் அவர்கள் அறையை நோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி போலீசார் மேலும் கூறுகையில், குற்றவாளி பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற கிரேடு-16 அரசுத்துறை அதிகாரியின் மகனாகவும், 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த வேலையில்லாதவராகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கியும், சனாவின் மொபைல் போனும் போலீசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.