
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அபிதா(26) நிறைமாத கர்ப்பிணியான அபிதாவுக்கு அதிகாலை 3 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் ஆம்புலன்சுரக்கு தகவல் தெரிவித்தனர். காலை 8 மணி வரை ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் குடும்பத்தினர் தனியார் வாகனம் மூலம் கர்ப்பிணியை கோடாலா அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு உடல் மோசமான இருந்ததால் கர்ப்பிணியை மோகாடா ஊரக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மாலை 6 மணிக்கு மோகாடா ஊரக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாசிக் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளனர். அந்த குழந்தையின் உடலை ஊருக்கு எடுத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ் வசதி இல்லை.
தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் அளவிற்கு பணமும் இல்லை. இதனால் சகாராம் பிளாஸ்டிக் பையில் தனது குழந்தையின் உடலை போட்டு 80 கிலோ மீட்டர் தூரம் அரசு பேருந்தில் பயணம் செய்து ஊருக்கு வந்து இறுதி சடங்கு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.