
சென்னை மாவட்டம் செம்பியம் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் தான் நீதிபதியின் மகள் எனக்கூறி, எனக்கு பிரபல உடலில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பேசும்போதும் நீதிபதியின் பெயரைச் சொல்லி எனக்கு பிரபல ஹோட்டலில் இருந்து சாப்பாடு வேண்டும்.
அதற்கான பணத்தை நீங்களே செலுத்தி விடுங்கள் எனக் கூறியுள்ளார். பெரம்பூரில் இருக்கும் பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கி அதற்கான வாடகையையும் போலீசாரிடம் கேட்டுள்ளார்.
அப்படி வாடகை தரவில்லை என்றால் தனது தந்தையான நீதிபதியிடம் சொல்லி விடுவேன் என மிரட்டியதால் போலீசாரும் அந்த பெண் கேட்டதை வாங்கி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அந்த பெண் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரேகா(40) என்பதும் அவர் எஸ் பிளனேடு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. பெரம்பூர் அகரத்தில் ரேகா மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
இவரது கணவர் உடல் நிலை சரி இல்லாமல் சொந்த ஊரில் உள்ளார். கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் விடுப்பில் உள்ள ரேகா நீதிபதியின் பெயரைச் சொல்லி காவல் நிலையத்திற்கு போன் செய்து போலீசாரை ஏமாற்றியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.