பெங்களூருவில் இன்று காலை நடந்த ஒரு கோர விபத்து மொத்த நகரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நாகனகௌடா, இன்று காலை சுமார் 8 மணியளவில் தனது 2 வயது மகள் வர்ஷா மற்றும் 4 வயது அண்ணன் மகள் பானு ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு பால் வாங்கச் சென்றுள்ளார்.

ஹென்னூர் போலீஸ் குடியிருப்பு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திரும்ப முயன்ற ஒரு பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குழந்தைகள் இருவர் மீதும் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், இரண்டு பிஞ்சு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.

தன் கண் முன்னாலேயே குழந்தைகள் நசுங்கி பலியானதைக் கண்டு தந்தை கதறியது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பள்ளி பேருந்து ஓட்டுநரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி நேரத்தின் போது பேருந்து ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் பிஞ்சு உயிர்கள் பலியாவது பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.