
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ஏதோ வயசுக்கு வந்து குச்சில இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து கற்பழித்து விட்ட மாதிரி எல்லோரும் கதிறிட்டு இருக்கீங்க. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தினால் தான் அது வன்புணர்வு விருப்பத்துடன் வந்தால் அது வேறு.
அந்த பொம்பள சொல்லுதுன்னு நீங்களும் அதை நம்பிட்டு பேசிட்டு இருக்கீங்களே என்று பேசினார். சீமானின் இந்த பேச்சிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது பெண்களை அவமதிக்கும் வகையில் சீமானின் பேச்சுக்கள் இருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி சுதா கண்னம் தெரிவித்துள்ள நிலையில் எம்.பி ஜோதிமனியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
சீமான் பொதுவெளியில் , எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சினையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை!
அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும். இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு,பெண்களை அவமதிக்கும் வகையில்,பெண்களின் பாதுகாப்பிற்கும்,கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும்.
இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு,பெண்களை கேவலமாக நினைப்ப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது. சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை,செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும்,பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.