துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கேரள சமூகத்தினர் ஆடம்பரமாக வரவேற்பளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியவுடன், நெட்டிசன்களிடையே பெரும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இந்தச் சூழலில், இந்திய இராணுவத்தை குற்றம் சாட்டிய அப்ரிடி, ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “உங்களிடம் 8 லட்சம் ராணுவம் இருக்கிறது, ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் திறமையற்றவர்கள்” என்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு  துபாயில் அவர் கலந்து கொண்ட நிகழ்வில், கேரள சமூகத்தினர் அவரை பூமாலை அணிவித்து வரவேற்றதையும், பாராட்டுகளுடன் கைதட்டியதையும் பார்த்த  நெட்டிசன்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

 

அதற்கிடையில், 48 வயதான அப்ரிடி, நிகழ்ச்சியில் பேசும்போது “நான் கேரள மக்களையும் அவர்களது உணவையும் மிக விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, அவரது யூடியூப் மற்றும் எக்ஸ் ன கணக்குகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டன. மேலும் இது போன்று நடந்த வரவேற்பு நிகழ்வுகள், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக இருக்கக்கூடும் என்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வலுத்து வருகின்றன.