பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பஞ்சாப் மாநிலம் ரூப்நகரைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்ற யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் “ஜான் மஹால்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். ஹரியானாவைச் சேர்ந்த பயண வீடியோ பதிவாளர் ஜோதி மல்ஹோத்ராவுடனும் இவர் தொடர்பில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் புலனாய்வு முகமை (PIO) அதிகாரி ஷாகிருடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்த ஜஸ்பீர், 2020, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பாகிஸ்தான் பயணித்ததும் போலீசார் வழக்கில் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் தூதரக ஊழியர் டேனிஷின் அழைப்பின் பேரில் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியிலும் ஜஸ்பீர் சிங் கலந்து கொண்டிருந்தார். இதன் மூலம் அவரின் செயல்பாடுகள் மேலும் சந்தேகம் கிளப்பியது. அவரிடம் இருந்த மொபைல் மற்றும் மின்னணு சாதனங்களை அதிகாரிகள் சோதனை செய்ததில் பாகிஸ்தானின் பல தொலைபேசி எண்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டதும், ஜஸ்பீர் தனது மொபைலில் இருந்த அனைத்து ஆதாரங்களையும் அழிக்க முயன்றதும் காவல் துறையால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைமுறையில் இருப்பதற்காக உளவு வலையமைப்புகள் மீது போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு வைக்கும் நிலையில், ஜஸ்பீர் கைது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்குமுன், ஜெய்சால்மர், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பை குறிக்கோளாக்கும் இந்த வகை செயல்களுக்கு எதிராக, இந்தியா தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை இந்த கைது மேலும் உறுதி செய்கிறது. மேலும் ஜோதி மல்கோத்ரா உடனாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.