இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, களத்தில் ரன்களைக் குவிப்பதில் கில்லாடி என்றாலும், சொந்த வாழ்க்கையில் ‘மறதி’ மன்னனாக வலம் வருகிறார். பாஸ்போர்ட், டேப்லெட், இயர் பாட்ஸ் என எதையாவது மறந்து வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ரோஹித், தற்போது ஐபிஎல் 2026 போட்டியின் போதும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான மோதலுக்காக, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து டீம் பஸ் கிளம்பத் தயாரானது. ரோஹித் சர்மாவும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் ஏறி அமர்ந்தார். ஆனால், திடீரென ஏதோ ஒரு பொருளை ஹோட்டல் அறையிலேயே வைத்துவிட்டு வந்ததை உணர்ந்த ரோஹித், பதற்றத்துடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.

ரோஹித் திரும்பி வரும் வரை மற்ற வீரர்கள் அனைவரும் பஸ்சிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. சிறிது நேரத்திற்குப் பிறகு, தான் மறந்த பொருளை எடுத்துக்கொண்டு ரோஹித் சிரித்தபடியே ஓடி வந்து பஸ்சில் ஏறினார். அதன்பின்னரே பஸ் மைதானத்தை நோக்கிப் புறப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோஹித்தின் இந்த மறதிச் சம்பவத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அண்மையில், நடிகை அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் விமான நிலையத்தில் பயணம் செய்தபோது, தனது செல்போனை அங்கேயே மறந்து வைத்தார். யாரோ ஒரு நபர் அந்தப் போனை எடுத்துக் கொடுத்தபோது, விராட் கோலி ஆச்சரியத்துடன் பார்த்த வீடியோ வைரலானது.

தற்போது ரோஹித் சர்மாவும் இதேபோல் பொருளை மறந்ததைப் பார்த்த ரசிகர்கள், “ரோஹித் சர்மாவிற்கு சரியான போட்டி கிடைத்துவிட்டது” என அனுஷ்கா சர்மாவையும், ரோஹித்தையும் ஒப்பிட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.