மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்கி என்ற இளைஞர், “தன்னை ஒரு யூடியூபர் பெண்ணிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், பின்னர் அந்தப் பெண் திருமண அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். மேலும், அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்றும், முன்னதாகவே பல இளைஞர்களை வலையில் சிக்க வைத்து பணம் பறித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், அந்த யூடியூபர் பெண்ணும் SP அலுவலகத்தில்  ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில், லக்கி மீது தன்னை திருமணம் செய்து உடலுறவு வைத்துவிட்டு பின்னர் தன்னை வேண்டாம் என நிராகரித்துவிட்டதாக  கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையில் முறையான புகாரும் அவர் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரான புகார்களை அளித்த நிலையில், போலீசார் இரு தரப்புகளிடமிருந்தும் விளக்கங்களை பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நௌகான் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், அந்த யூடியூபர் பெண் மீது இதற்கு முன் பல மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், அவை தற்போது விசாரணையிலிருக்கின்றன என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் உண்மை மற்றும் சட்டவழிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் இளைஞர்கள் பலரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.