கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(54). இவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம்(47) ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜயலட்சுமி(14), என்ற மகளும் மாதேஸ்வர்மா(11) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சாமிநாதன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தென்கீரனூர் மேம்பாலத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.