
சேலம் மாவட்டம் புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(42). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள்(35). இந்த தம்பதியினருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தீபக்(15), 8-ஆம் வகுப்பு படிக்கும் காமேஷ்(12) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர்.
நேற்று மதியம் வெங்கட்ராமன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் புளியங்காடு அருகே இருக்கும் வாணியாறு நீரோடைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வெங்கட்ராமன், கோவிந்தம்மாள் இருவரும் துணி துவைத்து கொண்டிருந்தனர்.
தீபக்கும் காமேஷும் ஓடையில் இருந்த தண்ணீரை வெளியே ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டனர். உடனே வெங்கட்ராமன் தனது பிள்ளைகளை தேடி பார்த்தார். அப்போது சிறிது தூரம் உள்ள சற்று ஆழமான குழியில் தீபக்கும் காமே ஷும் நீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.