சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து பரங்கிமலை அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது போரூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது.

சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் இரண்டு தூண்களுக்கு மத்தியில் ராட்சத கர்டர் அமைக்கப்பட்டது. நேற்று இரவு கட்டுமானம் சரிந்து 2 ராட்சத தூண்கள் விழுந்ததால் பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், மெட்ரோ ரயில்வே பணி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். இதனையடுத்து உயிரிழந்த நபரின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பிறகு கீழே விழுந்த இரண்டு ராட்சத தூண்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.