உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வெள்ளி உருக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு தொழிலாளர்கள் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் ஆக்ராவின் கோட்வாலி பகுதியில் உள்ள கினாரி பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் வெள்ளி உருக்கும் தொழிற்சாலையில் நடந்தது. வெடிப்பு காரணமாக மூன்று உலைகள் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்தன. வெடிப்பின் தாக்கத்தில் முழு கட்டிடம் இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நெருக்கமான வீதிகள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், நிர்வாகம் அவசரமாக அந்த பகுதியை சீல் செய்து வைத்தது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் நேரத்தில் வராததால், உள்ளூர் மக்கள் தான் இ-ரிக்ஷா மூலமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நகர துணை ஆணையர் சோனம் குமார் கூறியதாவது: “வெடிப்புக்கான காரணம் முதற்கட்ட தகவலின்படி சிலிண்டர் வெடிப்பு என கூறப்படுகிறது. இருப்பினும், இது முழுமையாக விசாரிக்கப்படுகின்றது.

தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும்” அவர் தெரிவித்தார். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.