அமைச்சர் சேகர்பாபுவை ஒருவர் தொலைபேசியில் மிரட்டிய ஆடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் திமுக இளைஞரணி செயலாளர் மகேஷ் என்பவரின் ஆதரவாளர் கொளத்தூர் தன்ராஜ்.

கொளத்தூர் தன்ராஜ் அந்த பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்வது வாங்குவது போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பலரையும் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஆடியோவில் உங்களிடம் பேச வேண்டும் என தனராஜ் கூறியதற்கு சேகர்பாபு நேரில் வா என கூறுகிறார். ஏன் தொலைபேசியில் பேச மாட்டீர்களா என கேள்வி எழுப்பியதோடு அவர் அமைச்சரை மரியாதை குறைவாக மிரட்டும் தோணியில் பேசியுள்ளார்.

உடனே அமைச்சர் போலீசில் புகார் அளிப்பேன் என கூறியவுடன் சவுக்கு சங்கருடைய விவகாரத்தை ஊடகத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கு அமைச்சர் சொல்லு என கூறிவிட்டு மரியாதையாக போனை வை என அழைப்பை துண்டித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனராஜை சுற்றி வளைத்து கைது செய்து தொலைபேசியை பறிமுதல் செய்தனர்.