சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது. இந்தியா முதலில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானை எதிர்கொண்டது. பாகிஸ்தான் அணியும் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2-ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 79 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த போட்டியின் போது விராட் கோலியை பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். இந்நிலையில் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் அதிரடியாக விளையாடிய நிலையில் 81 ரன்கள் வரை எடுத்தார். அவர் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் அக்சர் படேலின் பந்து வீச்சில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். ஒருவேளை வில்லியம்சன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால்  போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். இதனால் அனைவரும் அக்சரை பாராட்டிய நிலையில் விராட் கோலி ஒரு படி மேலே சென்று அக்சர் படேல் காலில் விழுந்து விட்டார். இதனை கவனித்த அவர் உடனடியாக தரையில் அமர்ந்து சிரித்தபடியே அதனை சமாளித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.