திருவண்ணாமலை மாவட்டம் ஞான முருகன் பூண்டி பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் ஓட்டுநர் தடுப்புகளை இடித்து கொண்டு நிற்காமல் சென்றதால் போலீசார் அந்த காரை வேகமாக துரத்தி சென்றனர்.

சுமார் 15 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கீழ பழந்தை பகுதியில் வயல்வெளி பள்ளத்தில் இறங்கி நின்ற போது தப்பி ஓட முயன்ற ஓட்டுனரை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராந்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் உறுதியானது.

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரது கார் ஒரு ஆடு மீது மோதியது. இதனால் காயமடைந்த ஆட்டிற்கு அதன் உரிமையாளர் பணம் கேட்டு மிரட்டியதால் அச்சத்தில் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாக பார்த்திபன் கூறியுள்ளார்.

குடிபோதையில் இருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என்ற அச்சத்தில் நிற்காமல் சென்றதாக தெரிவித்தார். இதனால் போலீசார் அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.