வங்கதேசத்தில் இடைக்கால ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோபெல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக செயல்படுகிறார் என்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்புத் தலைவர் சதாம் உசேன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்றது. அந்த போரை யூனுஸ் மறந்து விட்டதாகவும், பாகிஸ்தானுடன் அவருடைய நட்பு வங்கதேச சுதந்திரத்தை அவமதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் இணைந்து, ஜமாத் இ இஸ்லாம், ஹிஸ்ப் உத் தஹ்ரிர், அன்சருல்லா பங்கலா டீம், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் தற்போது வங்கதேசத்தில் செயல்பட்டு வருவதாகவும், அவற்றிற்கு யூனுஸ் நேரடியாக ஆதரவு அளிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் வங்கதேசம் சர்வதேச தீவிரவாதத் தளமாக மாறி வருவதாகவும் அவர் அதிர்வூட்டும் தகவலை வெளியிட்டார்.

மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையான இந்து சமூகத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் சதாம் உசேன் குற்றம் சாட்டினார். கடந்த ஆகஸ்ட் 5 முதல் இதுவரை இந்துக்கள் மீது 2,200-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் உயிரிழப்புகள், சொத்து சேதம், கோயில்கள் மீது தாக்குதல்,  வீடுகளிலிருந்து வெளியேற்றம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

தற்போது நடைபெறும் இடைக்கால ஆட்சி ஜனநாயகமற்றதும் மத அடிப்படையிலான பாசிச ஆட்சியாகவும், அவாமி லீக் மட்டுமே வங்கதேசத்தில் நிலையான ஜனநாயகத்தையும் மதச்சார்பற்ற ஆட்சியையும் வழங்கக் கூடிய ஒரே கட்சியாகவும் அவர் வலியுறுத்தினார்.