மும்பை செம்பூர் அருகே வாஷி நாகா பகுதியில் தங்கியுள்ள தினேஷ் அவ்ஹாத் (46) என்பவர், தனது மனைவி ரேகா (38) உடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார். வீட்டு வேலை செய்து வந்த ரேகாவிடம் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், தினேஷ் தனது மனைவியை அடித்து தாக்கியதோடு, மண்ணெண்ணையை ஊற்றி, கியாஸ் அடுப்பிலிருந்து எரிந்து கொண்டிருந்த தீயை பேப்பரில் பிடித்து வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பிடித்து அலறி உதவிக் கேட்ட ரேகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடனடியாக சியானில் உள்ள லோக்மான்யா திலக் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்களின் கணிப்பின் படி, ரேகாவின் வயிறு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் 33 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசில் புகார் பெறப்பட்டதை அடுத்து, தினேஷ் அவ்ஹாத் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பிய நிலையில், மனைவி வேலை காரணமாக மறுத்ததால் கோபத்தில் தீ வைத்து எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் மும்பை முழுக்க அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.