மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனயில்  பட்டப் பகலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை சிலர் காரில் கடத்தி செல்வதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  மேலும் தகவல் கொடுத்த நபரானது கடத்திய போது எடுத்த புகைப்படங்களையும் காவல்துறையினருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக அந்த கார் சென்ற பகுதியை அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியோடு கண்காணித்துள்ளனர் .அப்போது அந்த கார் தேனி நோக்கி செல்வது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் ஆண்டிப்பட்டி காவல்துறைக்கு தகவல் அனுப்பி தேனி பகுதியில் உஷார் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட காரில் வந்தவர்களை பிடிப்பதற்கு தயார் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் தொழிற்பேட்டை அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கையில் பெண்ணை கடத்தியதாக கூறப்பட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதால் வேறு இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட பெண்ணை ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து கடத்தப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் திடீர் திருப்பமாக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் தன்னை அவர்கள் கடத்தி வரவில்லை என்று கூறியதால் போலீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் விசாரணையில் கடத்தப்பட்ட பெண்ணுக்கும் கடத்தியதாக கூறப்பட்ட நபர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது .அந்த பிரச்சினையில் பணத்தை வசூலிப்பதற்காக அந்த பெண்ணை தேனிக்கு காரில் அழைத்து வந்ததாக கூறினார். இருப்பினும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறியதால் கடத்தப்பட்ட பெண் மற்றும் கடத்தியதாக பிடிக்கப்பட்ட நான்கு பேரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.